Tuesday 2 October 2018

மீனாட்சிப் பாட்டி
------------------
மிக ஒல்லிக்குச்சி உடம்புக்காரி..அறுபதைக் கடந்தவள். என்றாலும் உழைத்தே தேய்ந்ததில் இன்னும் நாலைந்து வயதைக் கூட்டியே காண்பிக்கும் தேகம்!
எப்போது எப்படி யார்மூலமாக என்ற ரிஷிமூல நதிமூலமெல்லாம் எங்களுக்குத் தெரியாது! ஆனால் நாங்கள் கண் விழிப்பதே அவள் முகத்தில் தான் பெரும்பாலான நாட்களில். வெந்நீர் அடுப்பின் சாம்பலை எடுத்துப் பல் தேய்த்த கையோடு அன்றைய குளியலுக்கான ஆயத்தங்களில் இறங்குவாள்.
அடிபைப். மோட்டார் தண்ணீரை வேலை செய்கிறவர்கள் பயன்படுத்துவதில் வீட்டில் ஏராளமான சட்டப் பிரச்சனைகள் இருந்தன. "ஒழியுது, தன் கையே தனக்கு!" என்று தண்ணீர் அடித்துக் குளிக்க நினைத்தாலோ தாவு தீர்ந்துவிடும்! கால் அண்டா தண்ணீரை பைப்புக்குள் ஊற்றி 'மாங்கு மாங்கென்று' அடித்தாலும் அந்தக் காலை வேளையில் பைப்பின் பரிதாபக் கிறீச்சிடல் கன்றுக்குட்டிகளை மிரள வைக்கும்; வேப்ப மரத்துக் காகங்கள் பதறிப் பறந்து , நிதானித்து மறுபடியும் விட்ட இடத்திலிருந்து கரையத் தொடங்கும்; மீனாட்சிப் பாட்டி குளிக்கத் தான் தண்ணீர் அடிக்கிறாளா இல்லை குளித்துவிட்டுத் தான் தண்ணீர் அடிக்கிறாளா என்று சந்தேகம் வரும்படிக்கு... அவள் வியர்வையில் ஒரு மாதிரியாகத் தள்ளாடி.. 'புஸ் புஸ்' என்று மேல் மூச்சுக் கீழ் மூச்சு வாங்க அவதிப்படும் போது -- அவளுக்கு பின் பாட்டு மாதிரி சற்றே இழுவையாக இன்னொரு 'புஸ்..புஸ்... ' ???? பைப்பு தான்! சடாரென்று அந்தக் கணத்தில் மீனாட்சி பாட்டிக்கு ஒரு துள்ளல் வரும் பாருங்க... "ஏ, குயந்த, ஒரு மொக்கு தண்ணி கொடேன்!" என்று கொல்லைப்பக்கம் வரும் யாரையாவது கெஞ்சி.. அதையும் ஊற்றி அடித்து... ஒரு வழியாக ஓரண்டா தண்ணீரைச் சேர்த்து விடுவாள்! விக்கிரமாதித்யை!
ஊடே, இதில் பக்கிகளாட்டம் நாங்கள்! அவள் கஷ்டம் புரியாத வயசு... 'ஆஸ் ஊஸ்சென்று' அரற்றியபடி அவள் நிறைத்திருக்கும் தண்ணீரைக் கேவலம் பல் விளக்கவும், 'சூசூ போகவும்' வாளியில் நிறைத்துக் கொண்டு ஆட்டம் காட்டுவோம்! (ஓகே; தண்ணி காட்டுவோம்!)
"ங்கொப்புரானை!"; "என்.......ந்ன்னா குயந்த? இப்...ப்... புடிப் பண்ணுறியே?"; "அடி, நீ நல்லாயிருக்க?! எங்கயாவது உண்டா இது?" என்று சின்னதும் பெரிசுமாகச் சத்தம் போடுவாள். நாங்களாவது, அடங்குவதாவது? ஏழெட்டு வாண்டுகள் எம கிங்கரர்கள் போல் அவளைச் சூழ்ந்து கொண்டு கையில் காய்ந்த கொட்டாங்கச்சி தொடங்கி அலுமினிய பக்கெட் வரை வைத்துக் கொண்டு அவளுடைய தண்ணீரைக் களவாடி விளையாடச் சமயம் பார்த்துக் காத்திருப்போம்... இதில் பத்துப் பாத்திரம் தேய்க்கவென்று கொல்லைப்புறம் கொண்டு வந்து போட்டிருந்தாலோ --அவள் பாடு படு கஷ்டம்! இருப்புச்சட்டியிலிருந்து வெங்கல உருளி வரை எதெல்லாம் வாகாக இருக்கிறதோ அதெல்லாம் எங்கள் கையில்... நாங்கள் எல்லாரும் ஆயுத பாணிகளாக நிற்க சபை நடுவே அலைபாயும் திரௌபதி போல மீனாட்சி -- திணறித் திண்டாடுவது அன்றைக்கெல்லாம் எங்களுக்குப் பெரிய வேடிக்கை!
பின்னொரு சமயம், ஆர்வக் கோளாறில் எங்கள் வால் பட்டாளத்தில் ஒருத்தர்- உப்புமா உருளியைத் தூக்க முடியாமல் தூக்கி, அவளோடு மல்லுக்கட்டிய போது அது பொதேரென்று கைதவறி தண்ணீரில் விழ -- ஓரண்டா தண்ணீரும் அரிசி உப்புமா மயம்! ஆயில் லீக்கேஜ் ஆன சென்னை கடற்கரை போல... கறிவேப்பிலையும், வத்தல் மிளகாயும், பெருங்காய மணமுமாக கமகமத்தத் தண்ணீரில் குளிக்கக் கொடுத்துவைக்காமல், மடேரென்று கோபமாக சாய்த்து விட்டு -- நல்ல வேப்பங்குழையோடு 'கட்டேல போறதுவோ..' என்று உக்கிரமாக எங்களைத் துரத்திவந்ததும் -- அதற்கு எங்கள் பெரிய பாட்டி சொம்போடு வந்து பஞ்சாயத்துப் பண்ணி -- நாங்கள் ஏழெட்டு பேர் சேர்ந்து எம்பி எம்பி அவளுக்குத் தண்ணீர் அடித்து, துண்டு சோப்பைப் பீர்க்க நாரில் அழுத்திக் கொண்டு .. அவள் கதறக் கதற, விடாமல் வறட், வறட்டென்று முதுகு தேய்த்து குளிப்பாட்டி.... கொண்டையைக் கூட அவிழ்க்காமல் மாமாவின் ஷாம்பூ பாட்டிலைத் திருட்டுத் தனமாக எடுத்து வந்து தலை தேய்த்து விட்டு ....
இப்படியாக நாங்கள் அவளோடு ஒரு சமாதான உடன்படிக்கைக்கு வந்ததை நீண்ட நெடுங்காலம் சொல்லிச் சிரித்துக் கொண்டேயிருந்தாள் மீனாட்சிப் பாட்டி!!
"அதுக்கென்ன இப்போ?" -- என்கிறீர்களா?
கிளினிக்கிற்கு தண்ணீர் கொண்டு வந்து போடச் சொல்லிப் பத்து மணி நேரமாகி விட்டது! 'உசுரு தண்ணி வேணுமேன்னு' நாற்பது ரூபாய்க்கு பாட்டில் தண்ணி வாங்கி வைச்சிருக்கோம்!!!
ம்ம்ம்... என்னத்த சொல்ல? எல்லாம் அன்னைக்கு அந்த மீனாட்சிப் பாட்டி உட்ட சாபமாத்தான் இருக்கும்!!
சில பேருக்குத் தான் அப்படி ஒரு உடம்பு வாய்க்கும். ஒரே திட்டமாக, வருஷங்கள் கழித்து நாம் அவர்களைப் பார்த்தாலும் கூட சட்டென்று அடையாளம் கண்டுகொள்கிற தோதில்... நம்மை ஆச்சர்யம் + பொறாமைப்பட வைக்கிற அளவிற்கு... "அன்னு கண்ட மேனியா அச்சு மாதிரி அப்படியே இருக்கிறதைப் பாரேன்!" என்று பகபகவென்று வயிறெரிவதைக் காட்டிக் கொள்ளாமல் பதவிசாக சிரித்தபடி நாம் பாராட்டித் தொலைப்போமே...அந்த ஹிட்லிஸ்டில் உள்ள ஒரு ஆசாமி பத்தி தான் இன்றைய பிரதாபம்!
அவர் தான் " ரெங்கசாமியா, அதாருடா? ஓ, அச்சுப்பிள்ளையா? தோ இந்த வூடு தான்!" என்று நண்டு சிண்டும் கூட பட்டப்பெயரைப் பட்டவர்த்தனமாகச் சொல்லும் திமிரை ரசித்துச் சிரிக்கும் மகானுபவர்!

நோ... இது கண்டிப்பாக அவருடைய ஃபிட்னஸ் ரகசியங்களைப் பிட்டுவைக்கும் பதிவு இல்லை! சொல்லப்போனால் அப்படி ஒன்று இருப்பது கூட அச்சுத்தாத்தாவிற்குத் தெரிய வாய்ப்பில்லை! எழுபதைக் கடந்த வாலிபம்... நாலே அடிதான் உயரம்! வாயில் சதா வெற்றிலைக் குதப்பல்! வயல் வாய்க்கா உண்டு; ஓஞ்ச ஒழிஞ்ச நேரமெல்லாம் தாயக்கட்டை, ஆடுபுலி ஆட்டம், கொழும்பு சர்வதேச வானொலி, குடகல்லில் தோசைக்கு மாவரைக்கும் இல்லத்தரசிகளுக்கு பேச்சுத் துணை; சாபூத்திரி, கல்லாமண்ணா, சில்லுக்கோடு, பல்லாங்குழி என்று எல்லாவற்றிலும் எங்கள் வானரப்படைகளுக்கு ஒப்புக்குச் சப்பாணி --ஆனாலும் வாச்சாங்குளி! மொத்தத்தில் சியர்கேர்ல்ஸ் மாதிரி இவர் அந்தத் தெருவுக்கே சியர்மேன்!

"கற்பகத்தையே நான் தான் கட்டியிருக்க வேண்டியது! சரி, நாலெழுத்து படிச்ச மாப்பிள்ளை நம்பூருக்கு ஒருத்தராவது இருக்கட்டுமேன்னு தான் நான் விட்டுக் கொடுத்தேன்! வக்கீலு! நிலம் நீச்சுன்னு வச்சிருக்கவங்களுக்கு வேணுமில்ல?!" -- இவர் லில்லிப்புட்! எங்கள் அத்தைப் பாட்டியோ அஞ்சரை அடி! "கற்பகம் எனக்காக என்னா அழுவை அழுதுச்சு தெரியுமா?" -- "சும்மா இருக்க மாட்டியா மாமா நீ" அலுத்துக் கொள்ளும் கற்பகம் பாட்டியைக் கண்டுகொள்ளாமல் மேலும் தொடர்வார்.

"சரி! 20 வருஷத்துக்கு முன்னாடி என் தங்கச்சிக்குத் தான் பிராப்தமில்லை... என் பொண்ணையாவது கட்டிக்கன்னு உங்க பெரிய தாத்தா கெஞ்சோ கெஞ்சுன்னு என் கையைப் பிடிச்சுக்கிட்டாரு... பொண்ணு மாநிறம் தான்! அட, நாம மட்டும் என்ன? அணைஞ்ச விறகாட்டம் தான இருக்கோம்! போனாப் போவுது, கட்டிக்கலாம்னு இருந்தேன்! பார்த்தா ஜாதகம் சரியில்ல... போச்சு!" -- "ஆமா, இவரு தங்கபஸ்பமா முழுங்கி மிணுங்கிற எம்ஜிஆரு... நாங்க க்யூவில நின்னோம்! பேச்சப் பாரு!" - வள்ளென்று விழுந்து விட்டுப் போவது என் பாப்பி பெரியம்மா தான்!

சளைக்காமல் தொடருவார்! "சொன்னேல்ல.. எங்க ரெண்டு பேருக்கும் பொருத்தம் இல்லைனு! பேச்சிலேயேத் தெரியுது பார்த்தியா?" என்று அப்பாவியாகக் கேட்பார்! "அதான, பெரியம்மா ஏன் கோச்சுக்கணும்?" என்று நாங்கள் தலையைச் சொரிகிற சைக்கிள் கேப்பில் இன்னொரு முறை அவர் வெற்றிலை போட்டிருப்பார்! இப்போது அவருடைய கடைக்கண் பார்வை எங்கம்மா மேல் பட்டிருக்கும்!

"ஒண்ணு தட்டுனா மூணு தட்டும்பாங்க, மாமா! பாப்பிக்கும் உனக்கும் பிராப்தமில்ல... அதனால என்ன? என் பொண்ணு பேபியக் கட்டிக்கன்னு அடுத்த பேச்சு! எனக்கும் இந்த யோசனை சரின்னு தான் பட்டுச்சு! ஆனாலும் ஒரு சங்கடம்! உங்கம்மா, நல்ல பொண்ணு தான்! ஆனா இது பொழுதன்னைக்கும் மணிபொம்மை செய்றேன், களிமண் பொம்மை செய்றேன், கோலம் போடுறேன், கூடை பிண்ணுறேன்னு சதா கழுத்த நட்டுக்கிட்டே இருக்குமே... நம்பள .. நம்பளன்னா -- நான், என் சம்சாரம், பசங்க நாலுன்னு எப்படியும் ஆறு டிக்கெட் இருக்குல்ல.. இது எப்படி கவனிக்கும்? ம்ஹூம், இது சரிப்படாதுன்னு மனசைக் கல்லாக்கிக்கிட்டு நானே 'நோ'ன்னுட்டேன்!" கம்பீரமாய் சொல்லுவார்.. "யோவ், அச்சு!" என்று அம்மா அடிக்குரலில் உறும.. கதை கேட்டபடி இருக்கும் எங்கப்பா கூட சிரிப்பார்!

"உனக்கு இந்தத் தாத்தாவ புடிக்குமா?"
"ஓ, புடிக்குமே!" -- இது நான்!
"உன்னைக் கூட கட்டிக்கலாம்! (எனக்கு அப்ப வயசு நாலு இல்ல அஞ்சு) சின்ன புள்ள.. கூடமாட ஒத்தாசையாவும் இருப்ப... நம்ப வீட்லேயும் பாட்டி நிறைய மாவத்தல், எலந்தைப் பழம், எலந்தை அடை எல்லாம் வைச்சிருக்கா! உனக்கு தினம் தருவா.. நீ முழுப் பரீட்சை லீவுக்கு வரும் போது நம்ம தகுந்த ஏற்பாடு பண்ணிப்போம்! சம்மதமா? சரிதானா?" -- மாவத்தல், எலந்தப் பழம் தவிர ஓரெழவும் புரியாமலேயே பூம்பூம் மாடு மாதிரி...பல்லிளித்துக் கொண்டே!!
"சபாஷ்! அதுக்கு அட்வான்சா தாத்தாக்கு ஒரு முத்தம் கொடு!" -- பொக்கைவாய்க் கன்னத்தைக் கஷ்டப்பட்டு பூரியாக்கி வாகாய் நீட்ட ... நானும் இச்க் பிச்க் என்று அழுத்தமாகக் கீழ்ப்படிந்தேன்! அப்புறம், மாவத்தல் எலந்த அடை எல்லாம் வேணும்ல?
"சரி, நீ இன்னைக்கு கேட்டோன்ன குடுத்துட்ட.. நாளைக்கெல்லாம் இந்த அச்சுத்தாத்தாக்கு யார் முத்தம் கொடுப்பா?"
ஐயகோ! இதென்ன புதுக்கஷ்டம்! தாத்தா பாவமில்லையா? எடு ஓட்டம்! ஐந்து நிமிடத்தில் மூச்சிரைக்க அவர் முன் வந்து நின்றேன்!
"தாத்தா, கவலைப்படாதீங்க! இதோ கவிதா.. என் ஃபிரெண்டு! நான் ஊர்லேர்ந்து திரும்பி வரவரைக்கும் இவ தான் தினம் உங்களுக்கு ஒரு முத்தம் கொடுப்பா... சரியா கவிதா?" -- என்னை விட மூன்று வயது பெரியவளான கவிதா வீலென்று அலறிக்கொண்டு ஏன் தெறித்து ஓடினாள்? ஏன் என்னைச் சுற்றி இருந்த எல்லோரும் அன்று வயிற்றைப் பிடித்துக் கொண்டும், முகத்தைச் சுளுக்கிக் கொண்டும் கடைவாய்ப்பல் வந்து வெளியே விழும் அளவிற்கு சிரித்தார்கள்??? எனக்கு மட்டும் ஏன் அன்று அழுகை அழுகையா வந்தது?

சொல்லுங்க நட்பூஸ், சொல்லுங்க!!!
பல் எடுத்து முடிக்கிற வரை சமர்த்துப் பாப்பாவாக அமர்ந்திருந்த அந்தக் குட்டி தேவதை, "பார்த்தியா, எவ்வளோ வீணாப் போயிட்டு? நைட் ப்ரஷ் பண்ணனும்; என்ன சாப்பிட்டாலும் வாய் கொப்பளிக்கணும்" - தேவைக்கேற்ப பயமுறுத்திய போதும் கூட கவனமாகக் கேட்டுக் கொண்டு தலை ஆட்டியது! (பால் பல் தான் -- ஒரே ஆட்டம்; கிணறு போலக் குழியாகிப் போச்சு; மனமே இல்லாமல் தான் ஊசி போட்டு, எடுத்தேன்!) 

ஆச்சு; ஃபீஸை வாங்கிப் போட்டுக் கொண்டு bye 👋 சொல்ல வேண்டியதுதான் பாக்கி!

அம்மா மடியில் அமர்ந்திருந்த அந்தப் பாப்பா குபீரென்று பாய்ந்து குதித்து இரண்டு கைகளையும் ஆட்டி ஏதேதோ சைகை செய்து சடுதியில் கண்களில் நீர் வழிந்தோட அழுது ஆர்ப்பாட்டம் பண்ணியது!

அம்மாவின் கண்களில் அளவில்லாத பயம்; "அவங்க அப்பா வேற ஊர்ல இல்லை மேடம்! இவ இப்படியெல்லாம் அழற டைப் இல்ல மேடம்! என்னன்னு பாருங்களேன்!" பதட்டமும் வியர்வையும் வழிய நின்றார்!

வாயில் உள்ள பஞ்சை எடுத்துப் போட்டுவிட்டு, "ஏம்மா, என்னாச்சு? வலிக்குதா? பாப்பாவுக்கு என்ன பண்ணுது? சொல்லு..."

சுற்றி நிற்கும் எங்களை ஒரு லுக் விட்டு, மீண்டும் சுவரோரம் கைகாட்டி அழ ஆரம்பித்தது! இந்த முறை கால்களை உதறிக் கொண்டே, உதட்டோரம் ரெத்தம் எட்டிப் பார்க்க, கண்களில் கோபம் கொப்பளிக்க, நீட்டிய விரலைத் திசை மாற்றி, "எப்படி அவங்க (சிஸ்டர் தான்) 'என்னோட' பல்ல 'குப்பை பாஸ்கெட்'ல போயிப் போடலாம்??? -- மறுபடியும் நயாக்ரா!!

நான் கமுக்கமாக மாஸ்குக்கு உள்ளேயே சிரித்து, "ஐயே, சிஸ்டருக்கு அவங்க மிஸ் இதெல்லாம் சொல்லித் தரவே இல்ல போலிருக்கு! அதான் இப்படி பண்ணிட்டாங்க!" என்று கண்ணடித்துக் கொண்டே நாலு டோஸ் விட்டேன்! (இந்த மாதிரி வாய்ப்பெல்லாம் எப்பவுமாக் கிடைக்கும்?!)

விதியே என்று எறிந்த பல்லைத் தேடி எடுத்துக் கவரில் போட்டு சிஸ்டர் நீட்டிய போது உம்மென்ற முகத்தோடு வாங்கி, கீழ்ப்பார்வை பார்த்தபடி ஓடிப்போய் அதே, அதேக் குப்பைத்தொட்டியில் தானே தன் கையால் கவரை விட்டெறிந்து விட்டு -- hand wash பண்ணனும் என்று கேட்டதும் -- நாங்கள் ஒட்டுமொத்தமாக "ஙே!"

-- மேற்படி விஷயம் நடந்து மூன்று நான்கு வருடங்கள் ஓடி விட்டன; இன்று அதே பாப்பா! மீண்டும்... போன முறை செய்த ரகளையைச் சொல்லி அவங்கம்மா என்னுடைய ஞாபகசக்தியைச் சரி பார்த்துக் கொண்டார்! அந்த அறிமுக ஐந்து நிமிடங்களிலும் அந்தக் குட்டிப் பெண்ணின் முகத்தில் அலாதி வெட்கம்... ஆழ்துளைக் கிணறு போல இந்த முறையும் கூட... பல் அவ்வளவு டேமேஜ்! மோட்சத்துக்கு அனுப்ப நாள் குறித்துவிட்டோம் பல்லுக்கு!

"படிச்சுட்டு என்ன ஆகப் போறேன்னு கேளுங்க மேடம்?"
இன்னும் ரெண்டு மடங்கு வெட்கம் ஏறிப்போக,
"டெண்டிஸ்ட் ஆகப் போறேன்!" என்று சொல்லிச் சென்றது!!

# வாடி_ராசாத்தீ