எல்லா திசைகளிலும்
கிளைத்து தழைத்திருக்கின்றன
வார்த்தைகள்.... வார்த்தைகள்... வார்த்தைகள்....
காதுகளின் கதவடைத்து
கவனமாய் நடக்கிறேன்
முட்களைத் தவிர்த்திடும் லாவகத்துடன்....
கற்பக விருட்சத்தின்
கர்ப்பச் சுமைகளைப் போல
காற்று வெளியெங்கும்
பதறி நிற்கின்றன
இன்னும் சொல்லப்படாத
எனக்கான சொற்கள் யாவும்.
பாதை நீண்டு
பயணம் பெருகுகிற
அந்தப் புள்ளியில்
மனம் அசைபோட்டு தவிக்கிறது....
இந்த மௌன-யாசிப்பைத் தொடக்கி வைத்ததும்கூட
ஒற்றைச் சொல் தானே யென்று....
யாத்திரை என்னவோ
தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது....
ராட்சசத் தீவிரமாய்
ஊறி நிறையும் வார்த்தைக் கிணறொன்று
மனசுக்குள்ளேயே உள்ளதை
பக்குவமாய் மறைத்தபடி....
பரிதவித்துப் பார்த்தபடி....
நன்றி: முகநூல்
நன்றி: கூகுள் படங்கள்
No comments:
Post a Comment